செய்திகள்
’அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும்’ - சச்சின் பைலட் அதிரடி பேச்சு
ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு எட்டியுள்ள நிலையில் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என நினைக்கிறேன் என்று சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
ராஜஸ்தானில் முதல்மந்திரி அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்மந்திரியாக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையில் மோதல் நிலவி வந்தது. சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கெலாட் தலைமையிலான அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால் ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் மற்றும் மாநில துணை முதல்மந்திரி பதவிகளில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். இதனால் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில், திடீர் திருப்பமாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை அதிருப்தி எம்.எல்.ஏ. சச்சின் பைலட் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குயின்போது ராஜஸ்தான் அரசுக்கு ஆதரவாக இருப்பதாக அவர் உறுதியளித்தார். இதனால் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த ராஜஸ்தான அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தைக்கு பின் சச்சின் பைலட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பல்வேறு விஷயங்கள் கூறப்பட்டன, நான் நிறைய விஷயங்களைக் கேட்டேன். சொல்லப்பட்ட சில விஷயங்கள் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நாம் எப்போதும் நிதானத்தையும், மனத்தாழ்மையையும் பராமரிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அரசியலில் தனிப்பட்ட தீமைகளுக்கு இடமில்லை. நாங்கள் ராஜஸ்தானில் 5 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் ஆட்சியமைத்துள்ளோம்.
எங்கள் கவலைகள் குறித்தும், ஆட்சி தொடர்பாக நாங்கள் எழுப்பிய பிரச்சனைகள் குறித்தும் சோனியா காந்தி கேட்டறிந்தார். இது தொடர்பாக 3 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைவர் அமைத்தது வரவேற்கத்தக்கது. அனைத்து பிரச்சனைகளும் தீர்த்துவைக்கப்படும் என நினைக்கிறேன்.
கட்சி எங்களுக்கு பதவி வழங்கியது. அதை திரும்பபெற்றும் கொண்டது. எந்தவொரு பதவிக்கும் எனக்கு விருப்பமில்லை, ஆனால் எங்கள் சுய மரியாதை அப்படியே இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.
கட்சிக்கு 18 முதல் 20 ஆண்டுகள் வரை எனது பங்களிப்பை அளித்துள்ளேன். அரசமைப்பதற்காக கடுமையாக உழைத்த மக்களின் பங்களிப்பை உறுதிப்படுத்த நாங்கள் எப்போதும் முயற்சிப்போம்.
என தெரிவித்தார்.
இதன் மூலம் கடந்த சில நாட்களாக நீடித்துவந்த ராஜஸ்தான் அரசியல் குழப்பம் இறுதியில் முடிவுக்கு வந்துள்ளது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.