செய்திகள்
குணால் கானா

பிளாஸ்மா தானம் செய்து 6 பேரின் உயிரை காப்பாற்றிய வாலிபர்

Published On 2020-08-10 12:37 GMT   |   Update On 2020-08-10 12:37 GMT
பெங்களூருவில் கொரோனாவில் இருந்து மீண்ட வாலிபர் பிளாஸ்மா தானம் செய்து 6 பேரின் உயிரை காப்பாற்றி உள்ளார்.
பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜாஜிநகர் பகுதியை சேர்ந்தவர் குணால் கானா (வயது 21). இவர் ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள எட்டின்பர்க் பல்கலைக்கழகத்தில் தொழில் மேலாண்மை படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாத இறுதியில் ஸ்காட்லாந்து நாட்டில் இருந்து குணால் பெங்களூருவுக்கு திரும்பி இருந்தார். பின்னர் அவர் வீட்டு தனிமையில் இருந்து வந்தார். இந்த நிலையில் குணால் திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கே.ஜி.அரசு ஆஸ்பத்திரியில் குணால் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அதன் பயனாக குணால் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி இருந்தார்.

இந்த நிலையில் குணாலிடம் அவரது நண்பர்கள் பிளாஸ்மா தானம் அளித்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முன்வர வேண்டும் என்று கேட்டு கொண்டனர். இதனால் பிளாஸ்மா தானம் செய்வதற்கு குணால் முன்வந்து இருந்தார். இதுபற்றி அறிந்த கே.ஜி.அரசு மருத்துவமனை டாக்டர்கள், பிளாஸ்மா தானம் செய்யும்படி குணாலிடம் கேட்டு கொண்டனர். அதன்படி கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி முதல்முறையாக குணால் பிளாஸ்மா தானம் செய்து இருந்தார். இந்த நிலையில் ஜெயதேவா ஆஸ்பத்திரியில் பணியாற்றும் இதய மருத்துவ நிபுணரான டாக்டர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்து ஆஸ்பத்திரி நிர்வாகம், குணாலை தொடர்பு கொண்டது அதன்பேரில் அவர் 2-வது முறையாக கடந்த ஜூலை மாத இறுதியில் பிளாஸ்மா தானம் செய்தார். அவரிடம் இருந்து பெற்ற பிளாஸ்மா மூலம் தற்போது டாக்டர் உள்பட 6 கொரோனா நோயாளிகள் காப்பாற்றப்பட்டு உள்ளனர். பிளாஸ்மா தானம் கொடுத்து தனது உயிரை காப்பாற்றியதற்காக குணாலுக்கு, ஜெயதேவா அரசு ஆஸ்பத்திரியில் இதய மருத்துவ நிபுணர் வீடியோ கால் மூலம் நன்றி தெரிவித்து கொண்டார்.
Tags:    

Similar News