செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

தண்ணீரில் அடித்து செல்லப்படும் மாடுகள் - கேரளா வெள்ளக்காட்சிகள் என வைரலாகும் பகீர் வீடியோ

Published On 2020-08-10 04:18 GMT   |   Update On 2020-08-10 04:18 GMT
ஓடும் தண்ணீரில் மாடுகள் அடித்து செல்லப்படும் காட்சிகள் அடங்கிய பகீர் வீடியோ கேரளா வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கேரளா மாநிலத்தில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலத்த மழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக வயநாடு உள்பட கேரளாவின் ஐந்து மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய வெள்ள பாதிப்பின் போது எடுக்கப்பட்டதாக பகீர் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவில் வேகமாக ஓடும் தண்ணீரில் மாடு உள்பட கால்நடைகள் அடித்து செல்லப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ வயநாடு மாவட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.



வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது வெள்ள பாதிப்பின் போது எடுக்கப்பட்டதாக தெரிந்தாலும் கேரளாவில் எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த வீடியோ மெக்சிக்கோவில் பெய்த பலத்த மழை காரணமாக சகுல்பன் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய போது எடுக்கப்பட்டது ஆகும். 

இதே காட்சிகள் அடங்கிய பல்வேறு வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. மெக்சிகோவில் ஜூலை 26 ஆம் தேதி ஹன்னா புயல் காரணமாக இந்த வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அந்த வகையில் வைரல் வீடியோ கேரளாவில் எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News