செய்திகள்
காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்

காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவர் தேவை - சசிதரூர் மீண்டும் வலியுறுத்தல்

Published On 2020-08-09 19:10 GMT   |   Update On 2020-08-09 19:10 GMT
காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என அக்கட்சியின் எம்.பி. சசிதரூர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி:

கடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிரமாக பிரச்சாரம் செய்தார்.

ஆனால் தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து, 2-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைந்தது.

இதைத்தொடர்ந்து, தேர்தல் தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று, காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். 

இதையடுத்து, கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார்.
சோனியா காந்தி பதவியேற்று இன்றோடு (10-ம் தேதி) ஒரு ஆண்டு நிறைவடைகிறது. ஆனால் இன்னும் காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும், ராகுல் காந்தி மீண்டும் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ராகுல் காந்தி தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சசிதரூர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், நமது கட்சி தலைமை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என விரும்புகிறேன். கடந்த ஆண்டு சோனியா காந்தி இடைக்கால தலைவராக தேர்வு செய்யப்பட்டபோது நானும் வரவேற்றேன். ஆனால் அவர் நீண்டகாலம் சுமையை சுமக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமானது அல்ல. நிரந்தர தலைவரை தேர்வுசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News