செய்திகள்
அஞசலிக்கு வைக்கப்பட்டுள்ள தீபக் சாத்தேவின் உடல்

கேரள விமான விபத்தில் உயிரிழந்த விமானி தீபக் சாத்தேவின் உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி

Published On 2020-08-09 11:22 GMT   |   Update On 2020-08-09 11:22 GMT
கேரள விமான விபத்தில் உயிரிழந்த விமானி விங் காமாண்டர் தீபக் சாத்தேவின் உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மும்பை:

வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது.

அந்த விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 190 பேர் பயணம் செய்தனர்.

விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தில் இருந்து சறுக்கிக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் விமானி தீபக் சாத்தே மற்றும் துணை விமானி அகிலேஷ் குமாரும் உள்ளடக்கம்.

விமானி தீபக் சாத்தே மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் சண்டிவாலி பகுதியை சேர்ந்தவர். இந்திய விமானப்படையில் விங் காண்டராக போர் விமானத்தை இயக்கியுள்ளார். தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர். இவர் போயிங் 737 விமானத்தை நன்றாக இயக்கும் அனுபவம் பெற்றவர் ஆவார்.

ஐதராபாத் விமானப்படை அகாடமியில் ஸ்வார்டு ஆஃப் ஹானர் (Sword of Honour) பெற்றவர். மிகவும் தொழில்முறை விமானி. 58 என்.டி.ஏ. பிரசிடென்ட் 
தங்க பதக்கம் வென்றவர். பயணிகள் விமானத்திற்கு வருவதற்கு முன் சிறந்த போர் விமானியாக இருந்தார்.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த விமானி தீபக் சாத்தேவின் உடல் மும்பையில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவன கட்டிடத்திற்கு கொண்டு வரப்பட்டது. 

மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட விமானி தீபக்கின் உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர். 

இதையடுத்து, விமானி தீபக்கின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளது. 

Tags:    

Similar News