செய்திகள்
விவசாயிகள் ரெயில் சேவையை மத்திய மந்திரி நரேந்திரசிங் தோமர் கொடி அசைத்து தொடங்கி வைத்த காட்சி.

இந்தியாவின் முதல் விவசாயிகள் ரெயில் மகாராஷ்டிரா - பீகார் இடையே தொடக்கம்

Published On 2020-08-08 03:23 GMT   |   Update On 2020-08-08 03:23 GMT
மகாராஷ்டிரா - பீகார் இடையே இந்தியாவின் முதல் விவசாயிகள் ரெயில் சேவையை மத்திய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி நரேந்திர சிங் தோமர், ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் முன்னிலையில் காணொலி காட்சி மூலம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
மும்பை :

விவசாயிகள் நலனுக்காக வேளாண் பொருட்களை கொண்டு செல்ல மட்டும் தனி ரெயில் இயக்கப்படும் என பட்ஜெட் தாக்கலின் போது நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தாா். எளிதில் அழுகும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்ற வேளாண் பொருட்களை மட்டும் கொண்டு செல்லும் வகையில் இந்த ரெயில் இயக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் இந்தியாவின் முதல் ‘விவசாயிகள் ரெயில்' சேவை நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் தேவ்லாலி நகரில் இருந்து நேற்று காலை 11 மணியளவில் விவசாயிகள் ரெயில் பீகார் மாநிலம் தானாப்பூருக்கு புறப்பட்டு சென்றது.

இந்த ரெயில் சேவையை மத்திய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி நரேந்திர சிங் தோமர், ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் முன்னிலையில் காணொலி காட்சி மூலம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்காடி, மாநில மந்திரி சகன்புஜ்பால், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் ரெயில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு தேவ்லாலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் மாலை 6.45 மணிக்கு தானாப்பூர் சென்றடையும். இதேபோல ஞாயிறுதோறும் மதியம் 12 மணிக்கு தானாப்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் மாலை 7.45 மணிக்கு தேவ்லாலி வந்தடையும்.
Tags:    

Similar News