செய்திகள்
முதல் மந்திரி அமரீந்தர் சிங்

பஞ்சாப் விஷ சாராய பலி எண்ணிக்கை 121 ஆக உயர்வு - இழப்பீடு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு

Published On 2020-08-07 08:44 GMT   |   Update On 2020-08-07 08:44 GMT
பஞ்சாபில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீடும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சண்டிகர்:

பஞ்சாபில் கடந்த மாதம் 29-ம் தேதி இரவில் விஷ சாராயம் குடித்ததில் பலர் பலியான தகவல் வெளியானது. இதில், அமிர்தசரஸ், படாலா மற்றும் டார்ன்தரன் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் வரை விஷ சாராயம் குடித்து 21 பேர் பலியாகி இருந்தனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையே, பஞ்சாபில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும்,  உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல் மந்திரி அமரீந்தர் சிங் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசிய அமரீந்தர் சிங், இந்த வழக்கில் கண்டறியப்படும் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். ஒருவர் கூட தப்பிவிட முடியாது. சிறப்பு வழக்கறிஞர் ஒருவர் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.  அதற்கான விசாரணையும் நடந்து வருகிறது.

விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்ட ரூ.2 லட்சம் என்ற இழப்பீட்டு தொகை ரூ.5 லட்சம் ஆக உயர்த்தி அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News