செய்திகள்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

அயோத்தி ராமர் கோவில் குறித்த விமர்சனம்: வகுப்பு வாதத்தை தூண்ட வேண்டாம்- பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

Published On 2020-08-06 14:13 GMT   |   Update On 2020-08-06 14:13 GMT
அயோத்தி ராமர் கோவில் குறித்த பாகிஸ்தான் விமர்சனம் வகுப்புவாத தூண்டுதலில் இருந்து விலகி நிற்குமாறு இந்தியா கேட்டுக்கொண்டு உள்ளது.
புதுடெல்லி:

நீண்ட கால சட்டப்போராட்டத்திற்கு பின் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சுப்ரீம் கோர்ட்  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அனுமதி வழங்கியது. இதையடுத்து கோயில் கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று பிரதமர் மோடி தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கோயில் கட்ட அனுமதி அளித்த இந்திய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, குறைபாடுடையது என்று கூறியிருந்தது. இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்துவது வளர்ந்து வருவதையும் இந்த தீர்ப்பு காட்டுவதாகவும் தெரிவித்திருந்தது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவது குறித்த பாகிஸ்தானின் விமர்சனத்தை இந்தியா இன்று கடுமையாக நிராகரித்ததோடு, அண்டை நாட்டை "வகுப்புவாத தூண்டுதலிலிருந்து" விலகி நிற்குமாறு  கேட்டுக்கொண்டது.

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா இந்தியாவின் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துமாறு பாகிஸ்தானிடம் கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:-

பாகிஸ்தானின் அறிக்கையை இந்தியாவுக்கு உட்பட்ட ஒரு விஷயத்தில் நாங்கள் கண்டிருக்கிறோம். பாகிஸ்தான்  இந்தியாவின் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும், வகுப்புவாத தூண்டுதலிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

இது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்தும் மற்றும் அதன் சொந்த சிறுபான்மையினரின் மத உரிமைகளை மறுக்கும் ஒரு தேசத்தின் ஆச்சரியமான நிலைப்பாடு அல்ல என்றாலும், இதுபோன்ற கருத்துக்கள் ஆழ்ந்த வருந்தத்தக்கவை" என்று கூறி உள்ளார்.
Tags:    

Similar News