செய்திகள்
பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் இருந்து காணாமல் போன சீன ஊடுருவல் குறித்த ஆவணங்கள்
சீன ஊடுருவல்களை ஒப்புக்கொள்ளும் ஆவணம் இந்திய பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் 15-ம்தேதி கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். எண்ணிக்கை தெரியாத சீன வீரர்களும் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.
சீன ராணுவம் மே மாதத்தில் இந்திய எல்லையில் ஊடுருவியது குறித்த ஆவணங்களை இந்திய பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
அதில் கல்வான் பள்ளத்தாக்கு LAC பகுதியில், குறிப்பாக கல்வான் பள்ளத்தாக்கில் சீன ஊடுருவல் மே 5-ந்தேதியில் இருந்து அதிகமாக இருந்தது. குக்ராங் நலா, பாங்கோங் ஏரியின் வடக்கு கரை ஆகிய இடங்களில் சீன ராணுவம் அத்துமீறியது’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. LAC-யில் சீனாவின் அத்துமீறல் என்ற புதிய மெனுவை உருவாக்கி அதில் பதிவேற்றம் செய்திருந்தது.
மேலும், அதில் ‘‘ராணுவம் மற்றும் ராஜீய மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடந்து சுமுக தீர்வு எட்டப்படும் வரை எல்லையில் பதற்றம் நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையைத் தணிக்க இரு தரப்பு ஆயுதப் படைகளுக்கிடையில் தரைமட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ஜூன் 6-ம் தேதி ஒரு கார்ப்ஸ் தளபதிகளின் கொடி கூட்டம் நடைபெற்றது. "இருப்பினும், ஜூன் 15 அன்று இரு தரப்பினருக்கும் இடையே ஒரு வன்முறை நேருக்கு நேர் சம்பவம் நடந்தது, இதன் விளைவாக இரு தரப்பும் உயிரிழந்தனர்’’ எனக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்கள் இன்று காணாமல் போகியுள்ளன.