செய்திகள்
எடியூரப்பா

மத்திய அரசிடம் இருந்து கர்நாடகத்துக்கு 1,279 வென்டிலேட்டர் கருவிகள் பெறப்படும்: எடியூரப்பா

Published On 2020-08-05 02:45 GMT   |   Update On 2020-08-05 02:45 GMT
மத்திய அரசிடம் இருந்து கர்நாடகத்துக்கு இந்த மாத இறுதிக்குள் 1,279 வென்டிலேட்டர் கருவிகள் பெறப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று தொலைபேசி மூலம் அதிகாரிகளுடன், எடியூரப்பா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதம மந்திரியின் பராமரிப்பு நிதியில் இருந்து, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கர்நாடக அரசு 681 வென்டிலேட்டர் கருவிகளை பெற்று உள்ளது. கடந்த வாரத்தில் ஆஸ்பத்திரிகளில் வென்டிலேட்டர் படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வாரத்தில் பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு 166 வென்டிலேட்டர் படுக்கைகள் உள்பட மாநிலம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் 335 வென்டிலேட்டர் படுக்கைகள் நிறுவப்பட்டு உள்ளது.

மீதம் உள்ள 346 வென்டிலேட்டர் படுக்கைகளும் இந்த வார இறுதிக்குள் நிறுவப்படும். கர்நாடகத்திற்கு மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட 1,279 வென்டிலேட்டர் கருவிகள் இந்த மாத இறுதிக்குள் பெறப்படும். இந்த வென்டிலேட்டர் கருவிகளை உடனடியாக ஆஸ்பத்திரிகள் நிறுவ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வென்டிலேட்டர் கருவிகளை பயன்படுத்த ஊழியர்கள் தேவை உள்ளது. மயக்க மருந்து, துணை மருத்துவர்கள், செவிலியர்களை ஆஸ்பத்திரிகளில் உடனடியாக பணிக்கு நியமிக்க வேண்டும்.

பெங்களூருவில் தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வென்டிலேட்டர் கருவிகளை வழங்கும்படி கோரிக்கை விடுத்து உள்ளது. இந்த கோரிக்கைகளை பரிசீலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News