செய்திகள்
கைது

பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்து 111 பேர் பலி - தேடப்பட்டு வந்த முக்கிய நபர் கைது

Published On 2020-08-04 17:41 GMT   |   Update On 2020-08-04 17:41 GMT
பஞ்சாபில் 111 பேரை பலி கொண்ட விஷ சாராய வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சண்டிகர்:

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில், பஞ்சாபில் கடந்த வாரம் புதன்கிழமை இரவில் நடந்த விஷ சாராய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  விஷ சாராயம் குடித்ததில் அமிர்தசரஸ், படாலா மற்றும் டார்ன்தரன் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 111 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

விஷ சாராய சம்பவத்தில் முதலில் பலி எண்ணிக்கை குறைவாக இருந்தபொழுதும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.  இதனால், பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் இந்த வழக்கை மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டார்.  இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிங் உறுதி கூறினார்.

இந்த வழக்கில் 3 மாவட்டங்களிலும் சேர்த்து 563 இடங்களில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.  இந்த சம்பவத்தில், கலால், வரி துறை அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள், 2 டி.எஸ்.பி.க்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் 4 பேர் உள்ளிட்டோரை முதல் மந்திரி அமரீந்தர் சிங் சஸ்பெண்டு செய்ததுடன், அவர்களிடமும் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் முதல் மந்திரி அறிவிப்பு வெளியிட்டார்.  இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யும்படியும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்படியும் போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வந்த ராஜீவ் ஜோஷி என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.  இவர், பஞ்சாபின் லூதியானா நகரில் பெயிண்ட் கடை ஒன்றின் உரிமையாளராக இருந்து வருகிறார்.  இவர், 3 டிரம்களில் மெத்தனால் வினியோகம் செய்துள்ளார்.  இவற்றை பயன்படுத்தியே, மெத்தனாலை அடிப்படையாக கொண்ட விஷ சாராயம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

அவர் பல்வேறு வகையான ஆல்கஹால் மற்றும் எரிசாராயம்  ஆகியவற்றை பஞ்சாப் மற்றும் டெல்லியின் பல பகுதிகளிலும் இருந்து கொள்முதல் செய்து வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் தேடப்பட்ட மற்றொரு நபரான தர்மீந்தர் என்பவர் இன்று கைது செய்யப்பட்டு உள்ளார்.  அவரிடம் இருந்து 50 லிட்டர் ஆல்கஹாலை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  இதனால், இந்த வழக்கில் மொத்த கைது எண்ணிக்கை 40 ஆக உயர்ந்து உள்ளது.  அவர்களில் 21 பேர் டார்ன்தரன் நகரில் இருந்தும், 10 பேர் அமிர்தசரஸ் கிராம பகுதியில் இருந்தும் மற்றும் 9 பேர் படாலா நகரில் இருந்தும் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

தொடர்ந்து ஜோஷி அளித்த தகவல், இந்த சம்பவத்தில் தொடர்புடைய வேறு சில முக்கிய புள்ளிகளையும் போலீசார் கண்டறிவதற்கு உதவியாக இருந்துள்ளது.
Tags:    

Similar News