செய்திகள்
ரஜினிகாந்த் பதிவிட்டதாக வைரலாகும் ட்விட்டர் பதிவு
தமிழ் சினிமா நடிகர் ரஜினிகாந்த் பதிவிட்டதாக ட்விட்டர் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு பயணம் செய்ய இ-பாஸ் கட்டாயம் என்ற சட்டம் அமலில் உள்ளது.
இந்நிலையில், ரஜினிகாந்த் ஆடம்பர காரில் பயணம் செய்வது போன்ற புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இவர் போயஸ் தோட்டத்தில் இருக்கும் தனது வீட்டில் இருந்து கேளம்பாக்கம் அருகில் இருக்கும் பண்ணை வீட்டிற்கு சென்றிருந்தார்.
இதனை தொடர்ந்து கேளம்பாக்கம் வரை சென்று வர ரஜினிகாந்த் இ பாஸ் வாங்கினாரா என்ற கேள்வி பரவலாக எழுந்தது. இதைத் தொடர்ந்து இ பாஸ் இல்லாமல் பயணித்ததற்கு ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்கும் தகவல் அடங்கிய ட்விட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், வைரல் ட்விட் ரஜினிகாந்த் பெயரில் இயங்கி வரும் போலி ட்விட்டர் அக்கவுண்ட்டில் இருந்து பதிவிடப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதுவரை தனது பயணம் பற்றிய சர்ச்சைக்கு ரஜினிகாந்த் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
மேலும் இந்த சம்பவம் வைரலான சமயத்தில் சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் ரஜினிகாந்த் இ பாஸ் பெற்ற பின்பே பயணம் செய்தார் என தெரிவித்தார். அந்த வகையில் வைரலாகும் ட்விட்டர் பதிவினை ரஜினிகாந்த் பதிவிடவில்லை என உறுதியாகி விட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.