செய்திகள்
கோப்பு படம்

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 1 ஆண்டு நிறைவு - ஸ்ரீநகர் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்

Published On 2020-08-03 20:08 GMT   |   Update On 2020-08-03 20:08 GMT
காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டு நாளையுடன் 1 ஆண்டு நிறைவடைவதையொட்டி இன்றும், நாளையும் ஸ்ரீநகர் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீர்:

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும், அப்பகுதி ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் விதமாக தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டது. சமூகவலைதள பக்கங்கள் தடை செய்யப்பட்டன. செல்போன், தொலைபேசி, சேவைகள் நிறுத்தப்பட்டன. இணைய தள சேவைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டன. 

மேலும், காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

தற்போது நிலைமை  சீரடைந்ததையடுத்து வீட்டுக்காவலில் இருந்த பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் மெகபூபா முப்தி உள்ளிட்ட சில தலைவர்களுக்கு வீட்டுக்காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு நாளையுடன் 1 ஆண்டு நிறைவடைகிறது. இதையொட்டி காஷ்மீரில் நாளை கருப்பு தினமாக அனுசரிக்க பிரிவினைவாதிகள் முயற்சித்து வருவதாகவும், பிரிவினைவாதிகள் வன்முறையில் ஈடுபடலாம் எனவும், பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டுருப்பதாகவும்
பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டம் முழுவதும் இன்றும் (ஆகஸ்ட் 4) நாளையும் (ஆகஸ்ட் 5) 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூடவும், போராட்டம் நடத்தவும் அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக ஸ்ரீநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 1 ஆண்டுகள் நிறைவடைவதால் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News