செய்திகள்
பபிதா போகத், கவிதா தேவிக்கு விளையாட்டுத் துறையில் உயர் பதவி
அரியானா மாநிலத்தில் விளையாட்டுத்துறை துணை இயக்குனர்களாக பபிதா போகத், கவிதா தேவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சண்டிகர்:
விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்படும் வீரர்-வீராங்கனைகளுக்கு அரசுத் துறையில் பதவிகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில், அரியானா மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக அரசின் முதன்மைச் செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார்.
அதில், மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை துணை இயக்குனர்களாக மல்யுத்த வீராங்கனை பபிதா போகத், கபடி வீராங்கனை கவிதா தேவி ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவுப்படி, இருவரும் ஒரு மாதத்திற்குள் பணியில் சேர வேண்டும்.
சர்வதேச மல்யுத்த வீரர் பபிதா போகத், பிரபல மல்யுத்த பயிற்சியாளரான மகாவீர் போகத்தின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற பபிதா போகத், தனக்கு கிடைத்துள்ள புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்வது குறித்து கூறுகையில், இதை அரசாங்கத்தால் ஒப்படைக்கப்பட்டுள்ள ஒரு பொறுப்பாக எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.
மேலும், வீரர்களுக்குத் தேவையான பயிற்சி வசதிகள், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கிடைப்பதை உறுதி செய்வேன். இதன்மூலம் அவர்கள் விளையாட்டு மற்றும் தங்கள் வேலையில் கவனம் செலுத்த முடியும் என்றும் பபிதா கூறினார்.