செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா ஊரடங்கு காரணமாக பணியில் சேர முடியாத ஊழியர்களுக்காக விதிகளில் தளர்வு - மத்திய அரசு

Published On 2020-07-30 05:48 GMT   |   Update On 2020-07-30 05:48 GMT
விடுமுறையில் சென்று, கொரோனா ஊரடங்கு காரணமாக குறிப்பிட்ட நாளில் மீண்டும் பணியில் சேர முடியாத மத்திய அரசு ஊழியர்களுக்காக விதிமுறைகளில் தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:

அலுவலக பணியாக வெளியூர்களுக்கு சென்று இருந்த மத்திய அரசு ஊழியர்கள் பலர், கொரோனா ஊரடங்கின் காரணமாக போக்குவரத்து வசதி இல்லாததால் உரிய நேரத்தில் ஊர் திரும்ப முடியாமல் போனது. இதனால், மீண்டும் பணியில் சேராத தேதி முதல் விடுமுறை நாட்களாக கருதப்படுமா? என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்தது. இதனால் அதுபற்றி அவர்கள் விசாரிக்கும் நிலை ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் இதுகுறித்து விளக்கமாக மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும் உத்தரவு ஒன்றை அனுப்பி இருக்கிறது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அலுவலக பணி நிமித்தமாக வெளியூர் சென்ற அரசு ஊழியர்கள், கொரோனா ஊரடங்கின் காரணமாக போக்குவரத்து வசதி இல்லாததால் குறிப்பிட்ட நாளில் தங்கள் தலைமை அலுவலகத்துக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டு இருக்கலாம். அப்படி திரும்ப இயலாத ஊழியர்கள் அதுபற்றி அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து இருந்தால், அவர்களுடைய அலுவலக வெளியூர் பயணம் முடிவடைந்த நாளில் இருந்து அவர்கள் பணியில் சேர்ந்ததாக கருதப்படும். ஊரடங்கு அமலுக்கு வந்த மார்ச் 25-ந் தேதிக்கு முன்னர் விடுமுறையில் சென்ற ஊழியர்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். மருத்துவ காரணங்களுக்காக விடுமுறையில் சென்றவர்கள், அது தொடர்பான சான்றிதழை தாக்கல் செய்தால் அவர்களுக்கும் இது பொருந்தும்.

தலைமை அலுவலகத்தில் இருந்து மார்ச் 21-ந் தேதி வெளியூர் சென்ற ஊழியர்கள், போக்குவரத்து வசதி இல்லாததன் காரணமாக மார்ச் 23-ந் தேதிக்குள் ஊர் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டு அதுபற்றி அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து இருந்தால், அவர்கள் 23-ந் தேதி வேலைக்கு வந்ததாக கருதப்படும். விடுப்பு எடுத்து சென்றவர்களின் விடுமுறை நாள் ஊரடங்கு சமயத்தில் முடிவடைந்தால், அவர்கள் அந்த தேதியில் இருந்து மீண்டும் பணிக்கு வந்ததாக கருதப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News