செய்திகள்
ஊரடங்கு தளர்வு 3.0 - இந்தியா முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து
ஊரங்கு தளர்வு 3.0 -வில் இந்தியா முழுவதும் அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன.
தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 2.0 அமலில் உள்ளது. இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31 ஆம் தேதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், ஊரடங்கு தளர்வு 3.0 தொடர்பான புதிய உத்தரவுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வு 3.0 தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள்:-
இந்தியா முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது.
சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, பண்பாடு, மத நிகழ்ச்சிகளுக்கு ஆகஸ்ட் 31 வரை தடை நீட்டிக்கப்படுகிறது.
யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ஆகஸ்ட் 5 முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இங்கு சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (கண்டெயின்மெண்ட் சோன்) ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு மிகக்கடுமையாக பின்பற்றப்பட வேண்டும்.
பள்ளி, கல்லூரிகள் செயல்பட ஆகஸ்ட் 31 வரை தடை விதிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் சமூக இடைவெளியுடன் கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில் சேவை, சினிமா ஹால்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், சினிமா தியேட்டர்கள், பார்கள், ஆடிட்டோரியங்கள் செயல்பட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து சேவை வந்தே பாரத் திட்டத்திற்கு மட்டும் குறைவான எண்ணிக்கையில் அனுமதி வழங்கப்படுகிறது.
எஞ்சிய விமான சேவைகளை அனுமதிப்பது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும்.