செய்திகள்
தள்ளாத வயதிலும் தளராத நம்பிக்கை... கொரோனாவில் இருந்து மீண்ட 101 வயது மூதாட்டி
ஆந்திர மாநிலம் திருப்பதியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 101 வயது மூதாட்டி சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
திருப்பதி:
இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரசால் 13.85 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசுக்கு இதுவரை 32,063 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழப்பு விகிதம் 2.3 சதவீதமாக உள்ளது. இதுவரை 8,85,577 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 63.9 சதவீதமாக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் வயதான நபர்கள்கூட, தீவிர மருத்துவ கவனிப்பினால் குணமடைவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
அவ்வகையில், ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த 101 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார்.
மங்கம்மா என்ற அந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும், திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தீவிர மருத்துவ கவனிப்பில் இருந்த அவர், தன்னம்பிக்கையுடன் சிகிச்சைக்கு போதிய ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். இதன் காரணமாக அவர் குணமடைந்து, நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
கொரோனாவால் உயிர் போய்விடுமோ என்று பயப்படுவோருக்கு இந்த மூதாட்டி உதாரணம் என்றும், 101 வயதிலும் தைரியமாகவும் தளராத நம்பிக்கையுடன் இருந்ததாகவும் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராம் தெரிவித்தார்.