செய்திகள்
ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்

சவாலான சூழ்நிலையில் எதிரிகளை வீழ்த்திய வீரர்கள்- கார்கில் வெற்றி தினத்தில் நினைவு கூர்ந்த ராணுவ மந்திரி

Published On 2020-07-26 03:34 GMT   |   Update On 2020-07-26 03:34 GMT
கார்கில் வெற்றி தினத்தையொட்டி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோர் இந்திய ராணுவத்தின் தைரியத்தை நினைவு கூர்ந்துள்ளனர்.
புதுடெல்லி:

இந்தியாவின் கார்கில் பகுதிக்குள் கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் பயங்கரவாதிகள் ஊடுருவினர். இதையடுத்து கார்கில் பகுதியிலிருந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகளை விரட்டியடிக்க இந்தியா தயாரானது. அந்த போர் திட்டத்துக்கு ஆப்ரேஷன் `விஜய்' என்று பெயரிடப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக கார்கில் லடாக் பகுதியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடுமையான போர் நடந்தது. உயரமான மலைத்தொடர்களில் மிகுந்த சவால்களை எதிர்கொண்ட இந்த போரில் 527 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். 

இதில் 4,000க்கும் அதிகமான பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இந்த போரானது அந்த ஆண்டு மே மாதம் தொடங்கி ஜூலை வரை நடைபெற்றது.



இந்த போரில் இறுதியாக இந்தியா வெற்றி வாகை சூடியது. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பால் பாகிஸ்தான் படைகள் பின்வாங்கின. 

இந்த போரில் வீரமரணமடைந்த ராணுவ வீர்ர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

அவ்வகையில் இன்று 21வது கார்கில் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி ராணுவ வீரர்களுக்கு அனைத்து தரப்பினரும் மரியாதை செலுத்துகின்றனர்.

பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்  வெளியிட்டுள்ள பதிவில், சமீபத்திய வரலாற்றில் உலகம் கண்ட மிக சவாலான சூழ்நிலையில் எதிரிகளை எதிர்த்துப் போராடிய இந்திய படைகளின் துணிச்சலான வீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதாக கூறி உள்ளார். 

கார்கில் வெற்றி தினமானது, இந்தியாவின் பெருமை, வீரம் மற்றும் உறுதியான தலைமையின் சின்னம் என உள்துறை மந்திரி அமித் ஷா கூறி உள்ளார்.

கார்கில் போரில் நாட்டுக்காக இன்னுயிரை இழந்த ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. கார்கில் வெற்றியையும் வீரர்களின் தியாகத்தையும் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்திய வண்ணம் உள்ளனர். 
Tags:    

Similar News