செய்திகள்
கொரோனா வைரஸ்

ஆம்புலன்சுக்காக காத்திருந்த கொரோனா நோயாளி உயிரிழப்பு

Published On 2020-07-23 11:07 GMT   |   Update On 2020-07-23 11:07 GMT
ஆம்புலன்சுக்காக காத்திருந்த கொரோனா நோயாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஸ்ரீகாளஹஸ்தி:

சித்தூர் மாவட்டம் , ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த ராஜீவ்நகர் பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் கடந்தசில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். அவருக்கு 14-ந்தேதி செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட சுகாதாரத்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வர வேண்டும், அதற்காக ஆம்புலன்சை இன்னும் அரைமணி நேரத்தில் அனுப்புகிறோம், தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டு தயாராக இருக்கும் படி கூறினர்.

அவர்கள் கூறியதுபோல் முதியவர் மருத்துவமனைக்கு வர தயாராக இருந்தார். மணிக்கணக்கில் காத்திருந்தாலும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் முதியவரின் குடும்பத்தினர் பலமுறை அப்பகுதி வார்டு செயலாளருக்கும் மற்றும் மருத்துவத்துறை ஊழியர்களுக்கும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர். ஆனால் இரவானாலும் ஆம்புலன்ஸ் வரவில்லை மற்ற வாகனங்கள் மூலமாக திருப்பதிக்கு முதியவரை சிகிச்சைக்காக கொண்டு செல்ல நினைத்தனர்.

ஆனால் கொரோனா தொற்றுக்கு பயந்து எந்த வாகனத்தினரும் வராததால் நள்ளிரவு கடந்தது. தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இது குறித்து அவரது குடும்பத்தினர் மீண்டும் மருத்துவத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். ஆம்புலன்சை அனுப்பி வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதியவரின் உயிரை காப்பாற்ற கேட்டுக்கொண்டனர். ஆனால் ஆம்புலன்ஸ் வரவில்லை.

கொரோனா பரிசோதனை செய்து 7 நாட்களுக்கும்மேல் ஆனதாலும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல கால தாமதம் ஏற்பட்டதாலும் அந்த முதியவர் சுமார் 15 மணி நேரம் ஆம்புலன்சுக்காக காத்திருந்து நேற்று அதிகாலை உயிரிழந்தார். தகவல் அறிந்ததும், ஸ்ரீகாளஹஸ்தி நகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் தூய்மை பனியாலர்களை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்து முதியவரின் பிணத்தை ஒரு வாகனத்தில் ஏற்றி ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள சுண்ணாம்பு அரிஜன வாடா அருகில் உள்ள மயானத்தில் புதைக்க ஏற்பாடுகளை செய்தார். அரசு அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி முதியவரின் பிணம் அடக்கம் செய்யப்பட்டது.
Tags:    

Similar News