செய்திகள்
பேபிபுளூ மாத்திரை

கொரோனா வைரஸ் மாத்திரை அதிக விலைக்கு விற்பனையா?- மருந்து நிறுவனம் விளக்கம்

Published On 2020-07-22 02:11 GMT   |   Update On 2020-07-22 02:11 GMT
கொரோனா வைரஸ் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மாத்திரை அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு அந்த மருந்து நிறுவனம், விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. பிற நோய்களுக்கான சிகிச்சையில் தற்போது தரப்படுகிற சில மருந்துகள் சோதனை அடிப்படையில் கொரோனா நோயாளிகளுக்கு தரப்படுகின்றன.

இந்த நிலையில், பிரபல மருந்து நிறுவனமான கிளென்மார்க் நிறுவனத்தார், வைரஸ் தொற்றுக்கு எதிராக பேபிபுளூ என்ற மாத்திரையை தயாரித்து வினியோகம் செய்வதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது.

இந்த மருந்து, கடந்த மாதம் 20-ந்தேதி முதல் விற்பனைக்கு வந்துள்ளது.

ஆனால் இந்த மருந்து உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நீண்ட கால நோயுடன் கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கும் பலன் அளிக்கும் என்று கிளென்மார்க் நிறுவனத்தார் தவறான தகவல் வெளியிட்டுள்ளதாகவும், இந்த மருந்து அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் கூறி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் புகார் செய்துள்ளார்.

இந்த புகாரைப் பெற்றதும், கிளென்மார்க் நிறுவனத்தாரிடம் விளக்கம் கேட்டு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நோட்டீஸ் அனுப்பியது.

அதற்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி வி.ஜி சோமானிக்கு கிளென்மார்க் நிறுவனம் பதில் அனுப்பி இருக்கிறது.

அதில் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான அவசர கால பயன்பாட்டுக்கு அங்கீகரிக்கப்பட்ட பிற மருந்துகளுடன் ஒப்பிடும்போது, எங்களது பேபிபுளூ மிகவும் சிக்கனமானதும், பயனுள்ளதும் ஆகும்.

எங்கள் மாத்திரை ஒன்றின் விலை ரூ.75. இது ரஷியாவில் ரூ.600, ஜப்பானில் ரூ.378, வங்காளதேசத்தில் ரூ.350, சீனாவில் ரூ.215 ஆகும்.

ஏற்கனவே ஒரு மாத்திரை ரூ.103-க்கு விற்கப்பட்டது. அதை ரூ.75 ஆக குறைத்துள்ளோம். சிறப்பான உற்பத்தியையும், சிறப்பான பலனை அடைவதற்காகவும் விலை குறைப்பு சாத்தியமானது.

எங்களது பேவிபிராவிர் மாத்திரை, கொரோனா வைரசுடன் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உடையவர்களுக்கு ஏற்றது என்று கூறவில்லை.

தயாரிப்பு சிறப்பியல்களின் சுருக்கம் அல்லது தயாரிப்பு தகவல் துண்டு பிரசுரம் போன்றவற்றில் நீரிழிவு அல்லது இதயநோயுடன் லேசானது முதல் மிதமானது வரையிலான கொரோனா பாதிப்புக்கு தரத்தக்கது என்று கூறப்படவில்லை.

நாள்பட்ட பிற நோய் பற்றிய குறிப்பு ஜப்பான் பதிவேட்டின் தரவு அடிப்படையிலானது.

பேவிபிராவிர் மட்டும்தான் லேசான, மிதமான கொரோனா பாதிப்புக்கான பயன் அளிக்கும் மருந்து என்றும் குறிப்பிடவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News