செய்திகள்
சச்சின் பைலட், வீரப்ப மொய்லி

சச்சின் பைலட் கருத்து நல்ல முடிவு: காங். மூத்த தலைவர் வீரப்ப மொய்லி

Published On 2020-07-17 03:17 GMT   |   Update On 2020-07-17 03:17 GMT
பா.ஜனதாவில் சேர மாட்டேன் என்று சச்சின் பைலட் கருத்து கூறியது நல்ல முடிவு என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
பெங்களூரு :

ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, சச்சின் பைலட்டிடம் இருந்து துணை முதல்-மந்திரி பதவியும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர் பா.ஜனதாவில் சேர உள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கு பதில் அளித்த சச்சின் பைலட், ராஜஸ்தானில் பா.ஜனதாவை தோற்கடிக்க பாடுபட்ட நான் பா.ஜனதாவில் இணைவேனா?. சிலர் தேவையின்றி நான் பா.ஜனதாவில் சேர உள்ளதாக வதந்தி கிளம்புகின்றனர். நான் அந்த கட்சியில் சேர மாட்டேன் என்று கூறினார்.

இந்த நிலையில் சச்சின் பைலட் கருத்து குறித்து பெங்களூருவில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான வீரப்ப மொய்லி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

சச்சின் பைலட் இளம்வயதிலேயே மத்திய மந்திரி, நாடாளுமன்ற உறுப்பினர், துணை முதல்-மந்திரி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை பெற்று உள்ளார். இந்த நிலையில் அவர் ராஜஸ்தான் முதல்-மந்திரிக்கு எதிராக செயல்பட்டது சரியல்ல. ஆட்சிக்குள் இருக்கும் பிரச்சினைகளை பேசி தீர்க்க வேண்டும். அதை விடுத்து போர்க்கொடி உயர்த்துவது சரியாக இருக்காது. சச்சின் பைலட்டுக்கு முதல்-மந்திரி பதவி மீது ஆசை வந்து உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்தால் மட்டுமே முதல்-மந்திரி ஆக முடியும் என்பதை சச்சின் பைலட் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

ராஜஸ்தான் அரசியலில் சச்சின் பைலட்டுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. துணை முதல்-மந்திரி, காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்ட நிலையிலும் சச்சின் பைலட் பா.ஜனதாவில் சேர மாட்டேன் என்று கூறியுள்ளார். அவர் எடுத்த மிக சரியான, நல்ல முடிவு.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News