செய்திகள்
மும்பை தாராவி பகுதி

தாராவியில் கொரோனா பாதிப்பு திடீர் அதிகரிப்பு - ஒரே நாளில் 23 பேருக்கு தொற்று

Published On 2020-07-16 10:58 GMT   |   Update On 2020-07-16 10:58 GMT
தாராவியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது. அதன்படி புதிதாக 23 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மும்பை:

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவி பகுதியில் அரசின் தீவிர முயற்சியால் கொரோனா பரவல் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த ஒரு மாதமாக இங்கு பெரும்பாலான நாட்கள் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் தான் இருந்தது. தாராவியில் நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை உலக சுகாதார அமைப்பு பாராட்டி இருந்தது.

இந்தநிலையில் நேற்று அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது. அதன்படி புதிதாக 23 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒரு மாதத்துக்கு பிறகு அங்கு ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20-ஐ தாண்டி உள்ளது. இதனால் அங்கு நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 415 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 2 ஆயிரத்து 67 பேர் குணமடைந்து உள்ளனர்.

இதேபோல தாதரில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. நேற்று அங்கு மேலும் 59 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுவரை அங்கு 1,277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல மாகிமில் 17 பேருக்கு வைரஸ் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,420 ஆக உயர்ந்து உள்ளது.
Tags:    

Similar News