செய்திகள்
தகுதிநீக்க நடவடிக்கை ஆரம்பம்- சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்
ராஜஸ்தானில் கொறடா உத்தரவை ஏற்காமல் அரசுக்கு எதிராக செயல்பட்ட சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய துணை முதல்வர் சச்சின் பைலட், தனக்கு 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு இருப்பதாக கூறியது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன், காங்கிரஸ் சட்டமன்றக் குழு கூட்டத்தையும் புறக்கணித்தார். கொறாரா உத்தரவு பிறப்பித்தும் சச்சின் பைலட் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ப. சிதம்பரம் போன்ற தலைவர்கள் சச்சின் பைலட்டுடன் பேசி சமரச முயற்சி மேற்கொண்டனர். அதற்கு பலன் அளிக்கவில்லை.
இதையடுத்து சச்சின் பைலட், அவருக்கு ஆதரவான இரண்டு மந்திரிகள் ஆகியோர் மந்திரி சபையில் இருந்து நீக்கப்பட்டனர். ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டு, கோவிந்த் சிங் நியமனம் செய்யப்பட்டார். அத்துடன் சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் பணியில் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், அரசுக்கு எதிராக செயல்பட்ட எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயகரிடம் கொறடா புகார் மனு அளித்தார். இந்த மனு மீது சபாநாயகர் உடனடியாக நடவடிக்கையை தொடங்கி உள்ளார்.
கொறடா அளித்த புகார் தொடர்பாக சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், 2 நாட்களுக்குள் (ஜூலை 17-க்குள்) விளக்கம் அளிக்காவிட்டால், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததாக கருதப்படும் என சபாநாயகர் கூறி உள்ளார்.