செய்திகள்
எடியூரப்பா

பெங்களூருவை தொடர்புகொள்ளும் அனைத்து சாலைகளும் மூடல்: ஒத்துழைக்க எடியூரப்பா வேண்டுகோள்

Published On 2020-07-15 04:14 GMT   |   Update On 2020-07-15 04:14 GMT
ஊரடங்கு அமலுக்கு வந்துவிட்டதால், பிற மாவட்டங்களில் இருந்து பெங்களூருவை தொடர்பு கொள்ளும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுவிட்டன.
பெங்களூரு :

பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உயிரிழப்பும் மிக அதிகமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் 56 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவை தடுக்கும் நோக்கத்தில் பெங்களூரு நகர் மற்றும் பெங்களூரு புறநகரில் 14-ந் தேதி (நேற்று) இரவு 8 மணி முதல் ஒரு வாரம் காலம் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.

அதன்படி பெங்களூரு நகர் மற்றும் புறநகரில் நேற்று இரவு 8 மணி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துவிட்டது. இதையடுத்து பிற மாவட்டங்களில் இருந்து பெங்களூருவை தொடர்புகொள்ளும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இருந்து வரும் சாலை, அத்திப்பள்ளியில் மூடப்பட்டுள்ளது.

மேலும் பெங்களூருவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலைகள் இரும்பு தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்கள் சென்று வர மட்டும் ஒரு முக்கியமான சாலை மட்டும் மூடப்படாமல் விடப்பட்டுள்ளன. பெங்களூருவில் பொதுமக்களின் நடமாட்டத்தை தடுக்க நகரம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “பெங்களூரு நகர் மற்றும் புறநகர் மாவட்டங்களில் கொரோனாவை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இன்று (நேற்று) இரவு 8 மணி முதல் அமலுக்கு வந்துவிட்டது. வருகிற 22-ந் தேதி காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் எந்த பிரச்சினையும் ஏற்படாது. பொதுமக்கள் பயப்படாமல், ஊரடங்கு கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கொரோனாவை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:    

Similar News