செய்திகள்
கோப்பு படம்

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் இறுதி சடங்கிற்கு 15 ஆயிரம் ரூபாய் - ஆந்திர முதல்மந்திரி அறிவிப்பு

Published On 2020-07-14 16:01 GMT   |   Update On 2020-07-14 18:12 GMT
ஆந்திராவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழப்பவர்களின் இறுதி சடங்கை மேற்கொள்ள தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க அம்மாநில முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
ஐதராபாத்:

ஆந்திர மாநிலத்தில் தற்போதைய நிலவரப்படி 30 ஆயிரத்து 163 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 14 ஆயிரத்து 528 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், அம்மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து 15 ஆயிரத்து 227 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு ஆந்திராவில் இதுவரை 408 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஆந்திராவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பாக அம்மாநில முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் 
இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.



இதில் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பை குறைக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் முதல் மந்திரியிடம் விளக்கம் அளித்தனர்.

இந்த கூட்டத்தில் கொரோனா மையங்களில் சத்தான உணவு வழங்கவும், அங்கு தூய்மைப்பணிகளை மேம்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டார்.

அதேபோல், ஆந்திராவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழக்கும் நபர்களின் இறுதி சடங்கு மேற்கொள்ள தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டார். இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News