செய்திகள்
டிப்டாடா ராய்

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பாராட்டப்பட்ட பெண் அதிகாரி வைரஸ் தாக்குதலுக்கு பலி - மேற்கு வங்காளத்தில் சோகம்

Published On 2020-07-14 13:59 GMT   |   Update On 2020-07-14 14:00 GMT
மேற்கு வங்காளத்தில் வைரஸ் தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டப்பட்ட பெண் அதிகாரி கொரோனா தாக்குதலுக்க்கு உயிரிழந்த சம்பவம் மேற்கு வங்காளத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநில ஹோக்லி மாவட்டத்தின் சந்தன்நகர் பகுதியில் துணை மேஜித்திரேடாக பணியாற்றி வந்தவர் டிப்டாடா ராய் (38). இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் தனது 4 வயது நிரம்பிய மகனுடன் வாழ்ந்து வந்தார்.

இதற்கிடையில், மேற்கு வங்காள அரசின் சிவில் சர்வீஸ் அதிகாரியான இவர் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுவந்தார். குறிப்பாக, மற்ற மாநிலங்களில் இருந்த சொந்த மாநிலமான மேற்கு வங்காளம் வரும் புலம்பெயர்ந்த தொழிலார்களுக்கு தேவையான உதவிகளை செய்வதிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையிலும் இவர் சிறப்பாக செயல்பட்டார்.

டிப்டாடா ராயின் சிறப்பான நடவடிக்கைகளுக்கு அம்மாநிலத்தின் முதல் மந்திரி உள்பட பல்வேறு தரப்பினரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், டிப்டாடா ராயிக்கு கடந்த வாரம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டார். அந்த பரிசோதனையில் ராய்க்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால், அவர் தன் வீட்டில் தன்னைத்தானே சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்திக்கொண்டார். கொரோனா காரணமாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட ராயின் உடல் நிலை நேற்று முன்தினம் திடீரென மோசமடைந்தது,.

இதையடுத்து, உடனடியாக வடக்கு 24 பர்கனாசில் உள்ள மருத்துவமனையில் ராய் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராய் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். 

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு மேற்கு வங்காளத்தில் பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்ட டிப்டாடா ராய் கொரோனாவால் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News