செய்திகள்
கர்நாடகாவில் கொரோனா

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 41 ஆயிரத்தை தாண்டியது: ஒரே நாளில் 73 பேர் பலி

Published On 2020-07-14 03:27 GMT   |   Update On 2020-07-14 03:27 GMT
கர்நாடகத்தில் கொரோனாவுக்கு புதிய உச்சமாக ஒரே நாளில் 73 பேர் பலியாகியுள்ளனர். புதிதாக 2,738 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 41 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. நேற்றுடன் கொரோனா பாதிப்பு 41 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் சுமார் 20 ஆயிரம் பேர் உள்ளனர். அதாவது மாநிலத்தின் மொத்த வைரஸ் பாதிப்பில் பெங்களூருவில் மட்டும் 50 சதவீதம் பேர் உள்ளனர். பெங்களூருவில் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.

அதாவது சுமார் 20 ஆயிரம் பேரில் 4,328 பேர் மட்டுமே குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மீதம் உள்ளவர்கள் நகரின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் புதிதாக வைரஸ் பாதிப்புக்கு ஆளாவோருக்கு படுக்கை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அதே நேரத்தில் கொரானாவுக்கு பலியாவோரின் எண்ணிக்கையும் தீவிரமாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 71 பேர் பலியான நிலையில், நேற்று மாநிலத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரே நாளில் 73 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட, இறப்பு விகிதம் அதிகரித்து வருவதை கண்டு கர்நாடக அரசு மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளது. கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 38 ஆயிரத்து 082 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் நேற்று 2,738 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 40 ஆயிரத்து 820 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 16 ஆயிரத்து 248 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 839 பேர் அடங்குவர்.

மாநிலத்தில் புதிதாக கொரோனா பாதித்தோரில், பெங்களூரு நகரில் 1,315 பேர், யாதகிரியில் 162 பேர், மைசூருவில் 151 பேர், தட்சிண கன்னடாவில் 131 பேர், பல்லாரியில் 106 பேர், கலபுலகியில் 89 பேர், விஜயாப்புராவில் 86 பேர், சிவமொக்காவில் 74 பேர், தார்வாரில் 71 பேர், உடுப்பியில் 53 பேர், துமகூருவில் 48 பேர், ராய்ச்சூர், தாவணகெரேயில் தலா 45 பேர், சிக்பள்ளாப்பூரில் 42 பேர், உத்தரகன்னடா, பாகல்கோட்டையில் தலா 37 பேர், கொப்பலில் 31 பேர், மண்டியாவில் 30 பேர், குடகில் 29 பேர், பெலகாவியில் 27 பேர், ஹாசனில் 25 பேர், பீதரில் 23 பேர், பெங்களூரு புறநகரில் 21 பேர், கோலாரில் 21 பேர், சிக்கமகளூருவில் 10 பேர், சாம்ராஜ்நகரில் 9 பேர், சித்ரதுர்காவில் 8 பேர், கதக், ஹாவேரியில் தலா 6 பேர் உள்ளனர். ராமநகரில் மட்டும் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

கர்நாடகத்தில் நேற்று கொரோனாவுக்கு 73 பேர் பலியாகியுள்ளனர். பெங்களூருவில் 47 பேர், மைசூருவில் 6 பேர், சிவமொக்காவில் 3 பேர், தார்வாரில் 5 பேர், துமகூருவில் ஒருவர், தாவணகெரேயில் ஒருவர், உத்தரகன்னடாவில் ஒருவர், பாகல்கோட்டையில் 2 பேர், குடகில் 2 பேர், பெலகாவியில் 2 பேர், ஹாசனில் ஒருவர், கதக், ஹாவேரியில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 761 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகத்தில் இதுவரை 8 லட்சத்து 56 ஆயிரத்து 148 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 17 ஆயிரத்து 74 மாதிரிகள் அடங்கும். 82 ஆயிரத்து 892 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்தோரில் 24 ஆயிரத்து 572 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 545 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெங்களூருவில் மட்டும் 317 பேர் அடங்குவர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News