செய்திகள்
ஆதித்ய தாக்கரே

எதிர்க்கட்சி பேரிடர் சுற்றுலாவில் மும்முரமாக இருக்கிறது: ஆதித்ய தாக்கரே தாக்கு

Published On 2020-07-13 04:20 GMT   |   Update On 2020-07-13 04:20 GMT
மக்கள் ஆரோக்கியத்தில் அரசு கவனம் செலுத்தும் போது எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா பேரிடர் சுற்றுலாவில் மும்முரமாக இருப்பதாக மந்திரி ஆதித்ய தாக்கரே தெரிவித்தார்.
மும்பை :

தானே மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் கல்யாண்-டோம்பிவிலி, நவிமும்பை, பிவண்டி மற்றும் மிராபயந்தர் மாநகராட்சி பகுதிகளில் நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் மகனும், மாநில சுற்றுச்சூழல் துறை மந்திரியுமான ஆதித்ய தாக்கரே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கொரோனா நிலைமை குறித்து எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் சுற்றுப்பயணம் செய்து வருவதை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது:-

நாங்கள் இந்த நேரத்தில் மக்கள் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துகிறோம். ஆனால் எதிர்க்கட்சி இங்கு பேரிடர் சுற்றுலாவில் மும்முரமாக உள்ளது.

மாநிலத்தில் கொரோனா தொற்று நிலைமை மோசமடைந்து விட்டால், எதிர்க்கட்சி (பா.ஜனதா) மட்டும் மகிழ்ச்சி அடையும். தாராவியை போன்ற மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதியில் கூட கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றால், கல்யாண்-டோம்பிவிலி பகுதியில் அது சாத்தியம் தான். வைரசை துரத்துவோம் திட்டத்தின் கீழ் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல் மற்றும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும்.

மும்பை, தானே நகரங்களை தொடர்ந்து, கல்யாண்-டோம்பிவிலி, பிவண்டி, அம்பர்நாத், உல்லாஸ்நகர் ஆகிய இடங்களில் பெரியளவில் சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News