செய்திகள்
உத்தவ் தாக்கரே

சுயக்கட்டுப்பாடு மூலம் கொரோனாவை ஒழிக்க முடியும் என தாராவி உலகுக்கு காட்டியுள்ளது: உத்தவ் தாக்கரே

Published On 2020-07-13 03:57 GMT   |   Update On 2020-07-13 03:57 GMT
கொரோனாவை சுயக்கட்டுப்பாடு மூலம் ஒழிக்க முடியும் என உலகுக்கு தாராவி காட்டியுள்ளது என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மும்பை :

ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான மும்பை தாராவியில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தாராவி குடிசை பகுதியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான இந்த பயணம் எளிதானது அல்ல. ஒன்றுபட்ட முயற்சிகள் காரணமாகவே தாராவியில் கொரோனாவை ஒழிக்க முடிந்தது. சுய கட்டுப்பாடு மற்றும் சமூக முயற்சிகளால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என தாராவி உலகுக்கு காட்டி உள்ளது.

தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 82 சதவீதம் பேர் அந்த நோய் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது 166 பேர் மட்டுமே தாராவியில் இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தாராவியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியதில் மும்பை மாநகராட்சி, தனியார் டாக்டர்கள், தொண்டு நிறுவனங்கள், தாராவியை சேர்ந்த பொதுமக்களின் பணி மகத்தானது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

தாராவி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், மந்திரியுமான வர்ஷா கெய்க்வாட் தெரிவிக்கையில், “கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நமது நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனம் அங்ககீரித்து பாராட்டி உள்ளது. இதன் மூலம் கொரோனா ஒழிப்பில் தாராவியை முன்மாதிரியாக உருவாக்கி இருக்கிறோம். நமது சிறப்பான பணியை தொடருவோம். கொரோனாவுக்கு எதிராக கடுமையாக போராடுவோம்” என்றார்.
Tags:    

Similar News