செய்திகள்
அமைச்சரின் மகனை கண்டித்த பெண் காவலர்

யாராக இருந்தாலும் தடுத்து நிறுத்துவேன்- அமைச்சரின் மகனை கண்டித்த பெண் போலீஸ் இடமாற்றம்

Published On 2020-07-13 03:32 GMT   |   Update On 2020-07-13 03:32 GMT
குஜராத் மாநில சுகாதாரத்துறை மந்திரியின் மகன் பிரகாஷ் கனானி, தனது நண்பர்களுடன் சேர்ந்து பெண் காவலர் சுனிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சூரத்:

குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் குமார் கனானி. இவரது மகன் பிரகாஷ் கனானி. ஊரடங்கை மீறி பிரகாஷ் கனானியின் நண்பர்கள் சூரத் நகரில் இரவு நேரத்தில் சாலையில் சுற்றித்திரிந்ததாக தெரிகிறது. அவர்களை பெண் காவலர் சுனிதா தடுத்து நிறுத்தி உள்ளார். 

இதனை அறிந்த அமைச்சரின் மகன் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த பெண் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

அப்போது சுனிதா, ‘கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? யாரா இருந்தாலும் தடுத்து நிறுத்துவேன்’ என கடுமையாக கண்டித்துள்ளார். அதன்பின்னர் அமைச்சரின் மகனும் பதிலுக்கு காவலரை எச்சரிக்க, காவலர் உரிய பதிலை அளித்துள்ளார்.

இந்த வீடியோ மற்றும் ஆடியோ கிளிப் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமைச்சரின் மகனுக்கு எதிராகவும், சுனிதாவிற்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்தன.

இந்த சூழலில் அமைச்சரின் மகன் பிரகாஷ் கனானியும், அவரது இரு நண்பர்களும் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேசமயம் பெண் காவலர் சுனிதா காவல் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டார். ஆனால் இந்த பிரச்சனைக்கு பிறகு காவலர் சுனிதா விடுப்பில் சென்றுள்ளார். நடந்த சம்பவம் பற்றி அவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
Tags:    

Similar News