செய்திகள்
கைது செய்யப்பட்ட சந்தீப் நாயர் மற்றும் ஸ்வப்னா சுரேஷ்

கேரளா தங்கக்கடத்தல் விவகாரம் - தலைமறைவாக இருந்த மேலும் ஒரு நபர் கைது

Published On 2020-07-11 17:27 GMT   |   Update On 2020-07-11 17:27 GMT
கேரளா தங்கக்கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த சந்தீப் நாயரை தேசிய புலனாய்வு அமைப்பினர் தற்போது கைது செய்துள்ளனர்.
திருவனந்தபுரம்:

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது. மேலும், வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா, சரித், சந்தீப் நாயர், பைசல் பேரத் ஆகிய நான்கு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், அவரது கூட்டாளி சந்தீப் நாயரின் மனைவி சௌமியா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர். 

மேலும் தூதரகத்தின் முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் என்ற பெண் இந்தக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.

இதற்கிடையில், பெங்களூரில் குடும்பத்தினருடன் பதுங்கி இருந்த ஸ்வப்னாவை என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று கைது செய்திருந்தனர். அவரை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான சந்தீப் நாயரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தற்போது கைது செய்துள்ளனர். இவரும் பெங்களூரில் பதுங்கி இருந்துள்ளார். சந்தீப்பை கைது செய்த அதிகாரிகள் அவரையும் நாளை காலை கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

சந்தீப் மற்றும் ஸ்வப்னா ஆகிய இருவரையும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் விசாரணைக்கு எடுக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டையே உலுக்கியுள்ள கேரள தங்கக்கடத்தல் விவகாரம் தற்போது பூதாகரமாகி வருகிறது. கடத்தல் தங்கம் இந்தியாவில் பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.     

Tags:    

Similar News