செய்திகள்
ஸ்வப்னா சுரேஷ்

கேரளா தங்கக்கடத்தல் விவகாரம் - தலைமறைவாக இருந்த ஸ்வப்னா சுரேஷ் கைது

Published On 2020-07-11 16:06 GMT   |   Update On 2020-07-11 16:06 GMT
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தங்கக்கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த ஸ்வப்னா சுரேஷை என்.ஐ.ஏ. அமைப்பினர் பெங்களூரில் வைத்து கைது செய்தனர்.
பெங்களூர்:

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது.

இந்த வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், அவரது கூட்டாளியின் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 

மேலும் தூதரகத்தின் முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் என்ற பெண் இந்தக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது. மேலும், வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா, சரித், சந்தீப் நாயர், பைசல் பேரத் ஆகிய நான்கு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையில் இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்தார். அவரை தேடும் பணியில் என்.ஐ.ஏ. தீவிரமாக ஈடுபட்டு வந்தது. முதலில் அவர் தமிழகத்தில் பதுங்கி இருக்கக்கூடும் என தகவல் வெளியானது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கி இருந்த ஸ்வப்னாவை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இன்று கைது செய்தனர். ஸ்வப்னாவுடன் அவரது குடும்ப உறுப்பினர்களையும்
என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா நாளை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அதன்பின் தங்க கடத்தல் தொடர்பாக ஸ்வப்னாவிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டையே உலுக்கியுள்ள கேரள தங்கக்கடத்தல் விவகாரம் தற்போது பூதாகரமாகி வருகிறது. கடத்தல் தங்கம் இந்தியாவில் பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்பான கோணத்திலும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.     

Tags:    

Similar News