செய்திகள்
பீகார் என்கவுண்டர்- 4 மாவோயிஸ்டுகளை சுட்டுக் கொன்றது போலீஸ்
பீகாரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 மாவோயிஸ்டுகளை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
பாட்னா:
வன்முறைத் தாக்குதல்கள் மற்றும் அரசின் நலத்திட்ட பணிகளை மேற்கொள்ள விடாமல் அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல் என பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க சிறப்பு காவல் படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பீகார் மாநிலம் பாஷ்சிம் சம்பரன் மாவட்டம் பகாகா பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சகஸ்த்திர சீமா பால் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் அங்கு சென்று மாவோயிஸ்டுகளை சுற்றி வளைத்தனர்.
அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து நவீன ரக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. போலீஸ் தரப்பில் சகஸ்த்திர சீமா பால் இன்ஸ்பெக்டர் காயமடைந்தார்.