செய்திகள்
30 கிலோ கடத்தல் தங்கம்

கேரளா தங்கம் கடத்தல் விவகாரம்: தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க உள்துறை அமைச்சகம் அனுமதி

Published On 2020-07-09 17:20 GMT   |   Update On 2020-07-09 17:20 GMT
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கம் விவகாரத்தை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க மத்திய உள்துறை அமைச்கம் அனுமதி அளித்துள்ளது.
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவில் தங்கம் கடத்தப்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான நிலைய சரக்கு பிரிவில் ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து மணப்பாடில் உள்ள அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டியை திறந்து பார்த்தனர்.

அப்போது அதில் 30 கிலோ தங்கம் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.15 கோடி ஆகும். உடனே சுங்க இலாகா அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது மணப்பாடில் உள்ள அலுவலகத்தில் பணிபுரிந்த சரித் குமார் என்பவருக்கு தங்க கடத்தலில் தொடர்பு இருப்பதும், மேலும் அங்கு மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்த அவர் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு சரித் குமார் பணிநீக்கம் செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

அதன்பிறகு, அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதை மறைத்து, தான் தொடர்ந்து பணிபுரிவதாக தெரிவித்ததாகவும், அதைத்தொடர்ந்து ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து அடிக்கடி தூதரகத்துக்கு பார்சல்கள் வந்தன. அந்த பார்சல்கள் சோதனை செய்யப்படாததை, சரித் குமார், தனக்கு சாதகமாக பயன்படுத்தி, தங்கத்தை பல முறை கடத்தியதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து சரித் குமாரை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த கடத்தலுக்கு தூதரகத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஸ்வப்னா சுரே‌‌ஷ் என்பவர் மூளையாக செயல்பட்டதும், இவர்கள் இருவரும் ரூ.100 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தி பல கோடி ரூபாய் சம்பாதித்து இருக்கலாம் எனவும் அதிகாரிகள் கருதுகிறார்கள்.

மேலும் ஸ்வப்னா சுரே‌‌ஷ் கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் செயலாக்க மேலாளராக பணியாற்றி வந்தார். சரித் குமார் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரையும் பணி நீக்கம் செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்பிறகு ஸ்வப்னா சுரே‌‌ஷ் தலைமறைவாகி விட்டார். நேற்று அவரது வீட்டில் அதிகாரிகள் 6 மணி நேரம் சோதனை நடத்தி, லேப்-டாப் போன்றவற்றை கைப்பற்றி சென்று உள்ளனர். மேலும் சில அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதும், அவர்களும் சிக்குகிறார்கள் என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கேரள மாநில பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் மத்திய அமைப்பு இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். அதற்கு கேரள மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று பிரதமர் மோடிக்கு கேரள மாநில முதல்வர் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த அனுமதி அளித்துள்ளது. ‘‘தங்கக் கடத்தல் நடவடிக்கை தேசிய பாதுகாப்பில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம்’’ எனத் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News