செய்திகள்
கான்பூர் என்கவுண்டர் வழக்கு- தேடப்பட்ட பிரபல ரவுடி விகாஸ் துபே கைது
உத்தர பிரதேசத்தில் 8 போலீசாரை கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி விகாஸ் துபேயை போலீசார் கைது செய்தனர்.
உஜ்ஜைன்:
உத்தர பிரதேச மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய முக்கிய ரவுடியான விகாஸ் துபேயை கைது செய்வதற்காக, கடந்த 3ம் தேதி கான்பூர் அருகில் உள்ள பிகாரு கிராமத்திற்கு போலீசார் சென்றனர். அப்போது ரவுடிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், போலீஸ் தரப்பில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீசார் உயிரிழந்தனர்.
போலீசார் நடத்திய தாக்குதலில் 2 ரவுடிகள் இறந்தனர். தப்பி ஓடிய விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இதற்காக நாடு முழுவதும் 20 போலீஸ் குழுக்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.
தலைமறைவான ரவுடி விகாஸ் துபேயின் வீடு பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. போலீசாரின் தேடுதல் வேட்டையின்போது விகாஸ் துபேயின் கூட்டாளிகள் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் விகாஸ் துபேயை போலீசார் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணைக்கு பிறகு அவர் உ.பி. கொண்டு செல்லப்படலாம் என்றும் கூறப்படுகிறது.