செய்திகள்
ராகுல் காந்தி

சத்தியத்துக்காக போராடுபவர்களை மிரட்ட முடியாது: ராகுல் காந்தி காட்டம்

Published On 2020-07-09 04:23 GMT   |   Update On 2020-07-09 04:23 GMT
சோனியா காந்தி குடும்பத்தினரின் அறக்கட்டளைகள் மீது விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் சத்தியத்துக்காக போராடுபவர்களை மிரட்ட முடியாது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி :

சோனியா காந்தி குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வரும் ராஜீவ் காந்தி நினைவு அறக்கட்டளை, இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம் ஆகிய 3 அமைப்புகளும் பெற்ற நிதி, நன்கொடை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அறக்கட்டளைகள் மீதான விசாரணை குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்ட சில மணி நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடியை கடுமையாக சாடி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர் “உலகம் அவரை போன்றது என மோடி நம்புகிறார். ஒவ்வொருவருக்கும் விலை இருப்பதாக அவர் நினைக்கிறார். அப்படி இல்லாத பட்சத்தில் மிரட்டல் மூலம் எண்ணியதை சாதிக்கலாம் என அவர் அவர் நினைக்கிறார். ஆனால் சத்தியத்துக்காக போராடுபவர்களுக்கு விலை இல்லை. அவர்களை மிரட்ட முடியாது என்பதை மோடி ஒரு போதும் புரிந்துகொள்ளமாட்டார்“ என தெரிவித்திருந்தார்.

எனினும் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் அறக்கட்டளைகள் மீதான விசாரணை குறித்து எதையும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே சோனியா காந்தி குடும்பத்தினரின் அறக்கட்டளைகள் மீதான விசாரணையை எதிர்க்கட்சிக்கு எதிரான மத்திய அரசின் சூனிய வேட்டை என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

அதேசமயம் விசாரணை குறித்து அறக்கட்டளைகளுக்கு எந்த பயமும் இல்லை என்றும் சட்டத்தை மதிக்கும் நபர்கள் இது போன்ற எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க தயாராக இருப்பார்கள் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில் “ஆர்.எஸ்.எஸ்., விவேகானந்தா அறக்கட்டளை, பா.ஜ.க.வின் வெளிநாட்டு நண்பர்களால் நடத்தப்படும் அறக்கட்டளைகள் உள்ளிட்டவற்றை அரசாங்கம் பாதுகாக்கிறது. இதுபோன்ற அறக்கட்டளைகளிடம் கேள்விகள் கேட்கப்படவில்லை. ஆனால் சோனியா காந்தி குடும்பத்தினரின் அறக்கட்டளைகளிடம் கேட்கப்படுகின்றன” எனக் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செய்தித் தொடர்பாளரான ரந்தீப் சுர்ஜாவாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் “மோடி அரசாங்கத்தின் வெளிப்படையான இயலாமை மற்றும் முழுமையான தோல்வியை புதைப்பதற்காக தவறான தகவல்கள், கவனச்சிதறல் மற்றும் திசைதிருப்பல் ஆகியவற்றை பரப்புவதற்காக, ஒவ்வொரு நாளும், ஒரு புதிய சதி பா.ஜ.க.வின் தலைமையால் வடிவமைக்கப்படுகிறது“ என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News