செய்திகள்
பிரேசில் அதிபர் விரைவில் நலம்பெற பிரார்த்தனை செய்கிறேன் -மோடி
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் அதிபர் விரைவில் நலம்பெற இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பிரேசில் நாட்டு அதிபர் ஜெயிர் போல்சனரோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் உலகமே அச்சத்தில் இருக்கும் போது மக்கள் சமூக விலகல், முகக்கவசம் அணியத் தேவையில்லை சுதந்திரமாக நடமாடுங்கள் என்று பிரசாரம் செய்த அவர், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
லேசான அறிகுறிகளுடன் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். கூட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை எனவும், அலுவலக பணிகளை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். அவர் விரைவில் குணமடைய பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரேசில் அதிபர் விரைவில் நலம்பெற இந்திய பிரதமர் மோடியும் பிரார்த்தனை செய்வதாக கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘எனது நண்பரும் பிரேசில் அதிபருமான ஜெயிர் போல்சனரோ குணமடைய பிரார்த்தனை செய்வதுடன், எனது வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.