செய்திகள்
குஜராத்தில் விசாரணைக் கைதி அடித்துக் கொலை- 6 மாதங்களுக்கு பிறகு போலீசார் மீது வழக்குப்பதிவு
குஜராத்தில் விசாரணைக் கைதி திடீரென மரணம் அடைந்தது தொடர்பாக 6 மாதங்களுக்கு பிறகு போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வதோதரா:
குஜராத் மாநிலம் வதோதரா நகரின் பதேகஞ்ச் போலீசார், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் பாபு ஷாயிக் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். பாபு ஷாயிக்கை போலீசார் அடித்துக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் தீவிரமாக விசாரணை நடத்தப்படுகிறது.
இந்நிலையில், 6 மாதங்களுக்கு பிறகு இந்த வழக்கில் 6 போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் கோகில், சப்-இன்ஸ்பெக்டர் ரபாரி மற்றும் 4 காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெறுவதாகவும் விசாரணை அதிகாரி பாட்டீல் தெரிவித்தார்.
திருட்டு வழக்கில் பாபு ஷாயிக்கை பிடித்து காவல் நிலையத்தில் விசாரணை நடத்தியபோது அவர் இறந்துள்ளார். ஆனால் அவரது உடலை வெளியில் தெரியாமல் அப்புறப்படுத்தி உள்ளனர். காவல் நிலையத்தில் உள்ள தடயங்களையும் அழித்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.