செய்திகள்
சந்திரகாந்த் பாட்டீல்

வீட்டில் இருந்து மாநிலத்தை ஆட்சி செய்ய முடியாது: உத்தவ் தாக்கரே மீது பாஜக தாக்கு

Published On 2020-07-08 04:04 GMT   |   Update On 2020-07-08 04:04 GMT
வீட்டில் இருந்து கொண்டு மாநிலத்தை ஆட்சி செய்ய முடியாது, களத்தில் வந்து மக்களை சந்திக்க வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை பாரதீய ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் சாடியுள்ளார்.
மும்பை :

மராட்டிய மாநில பாரதீய ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மராட்டியத்தில் ஒரு தலைவர் என்பவர் மன்னர் சத்ரபதி சிவாஜியை போல மக்களுக்கு தெரியவேண்டும். முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடந்த 1-ந்தேதி ஆஷாட ஏகாதசி திருவிழாவில் பங்கேற்க பண்டர்பூர் விட்டல்சாமி கோவிலுக்கும், மும்பையில் உள்ள சில கொரோனா சிகிச்சை மையங்களுக்கு மட்டுமே சென்று இருக்கிறார்.

அதன்பிறகு அவர் எந்த இடத்திற்கும் செல்லவில்லை. தனது வீட்டில் இருந்தே மாநிலத்தை ஆட்சி செய்ய முடியாது.

தேவேந்திர பட்னாவிஸ் ஒவ்வொரு நாளும் பயணம் செய்து மக்களை சந்திக்கிறார். அவருக்கு மட்டும் கொரோனா வைரசை பற்றிய பயம் இல்லையா? நீங்கள் மக்கள் சேவை செய்கிறீர்கள் என்றால் உங்களால் வீட்டில் உட்கார முடியாது.

களத்திற்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும். முடியாவிட்டால், குறைந்தபட்சம் மாதோஸ்ரீ இல்லத்திலாவது மக்களை சந்திக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்றுமுன்தினம் சரத்பவார் மாதோஸ்ரீக்கு சென்றது பற்றி கேட்டதற்கு, சரத்பவார் 2012-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு கோரி மாதோஸ்ரீக்கு வந்தார். அதன்பிறகு தற்போது கொரோனா தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் உத்தவ் தாக்கரேயின் இல்லத்துக்கு பலமுறை சென்று இருக்கிறார். சரத்பவார் போன்ற ஒரு மூத்த மற்றும் மரியாதைக்குரிய தலைவர் மாதோஸ்ரீக்கு அடிக்கடி வருவது நல்லதல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News