செய்திகள்
கோப்புப்படம்

லடாக் எல்லையில் இருந்து தொடர்ந்து வெளியேறும் சீன ராணுவம்

Published On 2020-07-08 02:13 GMT   |   Update On 2020-07-08 02:13 GMT
லடாக் எல்லையில் இருந்து சீன படைகள் தொடர்ந்து வெளியேறி வருவதுடன், அங்கு அமைத்த கூடாரங்களையும் அகற்றி வருகின்றனர்.
புதுடெல்லி:

லடாக் எல்லையில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவியதால் கடந்த மாதம் 15-ந்தேதி இருதரப்பு ராணுவத்துக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீனா தரப்பில் சுமார் 35 பேரும் உயிரிழந்தனர். இதனால் எல்லையில் இருதரப்பும் படைகளை குவித்து வரிந்து கட்டிக்கொண்டு நின்றன. எனவே இருநாட்டு எல்லையில் போர் மேகம் சூழ்ந்ததுடன், பதற்றமும் அதிகரித்தது.

இதற்கு மத்தியில் அங்கு பதற்றத்தை தணித்து அமைதியை நிலைநாட்டுவதற்காக இருதரப்பும் பேச்சுவார்த்தைகளையும் தொடர்ந்தன. அந்தவகையில் கடந்த 30-ந்தேதி இருநாட்டு லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் நடந்த 3-வது சுற்று பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டது. எல்லையில் பதற்றத்துக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு படிப்படியாக படைகளை விலக்குவது எனவும், எல்லையில் அமைதியை மீண்டும் ஏற்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இருநாட்டு எல்லை பிரச்சனையை கவனிக்க சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ள இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவு மந்திரி வாங் யி ஆகியோர் கடந்த 5-ந்தேதி சுமார் 2 மணி நேரம் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு தரப்பிலும் படைகளை விலக்கிக்கொள்ளும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி விரைவில் முடிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் இருந்து இரு நாடுகளும் தங்கள் படைகளை எல்லையில் இருந்து வாபஸ் பெறும் நடவடிக்கைகளை தொடங்கின. அதன்படி கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் நடந்த ரோந்து பாயிண்ட் 14, 15 மற்றும் 16-வது நிலைகளில் இருந்து சீன படைகள் பின்வாங்கி சென்றன. மேலும் ஹாட்ஸ்பிரிங், கோக்ரா ஆகிய பகுதிகளிலும் படை விலக்கல் நடவடிக்கைகள் தொடங்கின.

இந்த பணிகள் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தன. சீன படைகள் கோக்ரா மற்றும் ஹாட்ஸ்பிரிங் பகுதிகளில் இருந்து கணிசமான அளவுக்கு திரும்பி சென்றன. அப்போது அவர்கள் அங்கு அமைத்திருந்த தற்காலிக கூடாரங்களையும் அகற்றி சென்றதாக எல்லைப்புற வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த வாபஸ் பணிகள் 2 நாட்களில் முடிவடையும் எனவும் அவை கூறின.

இதைப்போல சீன ராணுவம் ஊடுருவி இருந்த பங்கோங் சோ ஏரி பகுதியில் இருந்தும் சீன படைகள் குறைவான எண்ணிக்கையில் தொடர்ந்து வெளியேறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவைப்போலவே இந்தியாவும் எல்லையில் இருந்து படைகளை விலக்கி வருகிறது. அதன்படி இந்திய வீரர்களும் 2 கி.மீ. தொலைவுக்கு பின்வாங்கி வருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் சீன படைகளின் வாபஸ் நடவடிக்கை குறித்தும் இந்திய வீரர்கள் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் எல்லையில் மிகுந்த உஷார் நிலையிலேயே இருப்பதாக ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு முதற்கட்ட படை விலக்கல் நிறைவடைந்தபின் இரு தரப்பும் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளன. இந்த பேச்சுவார்த்தை இந்த வார இறுதியில் நடத்தப்படும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இரு நாட்டு படை விலக்கல் நடவடிக்கைகளால் லடாக் எல்லையில் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து வந்த பதற்றம் முடிவுக்கு வந்து அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News