செய்திகள்
ரஜோரியில் பயங்கரவாதிகள் பதுங்கிடம் அழிப்பு- குவியல் குவியலாக வெடிபொருட்கள் பறிமுதல்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பதுங்கிடத்தை பாதுகாப்பு படையினர் அழித்ததுடன், அங்கிருந்த ஏராளமான வெடிபொருட்களை கைப்பற்றினர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்து நாசவேலைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளை ஒழிக்க, போலீசார், பாதுகாப்பு படையினர் இணைந்த கூட்டுப்படையினர் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றனர். சமீபகாலமாக நடந்த தேடுதல் வேட்டையின்போது ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், ரஜோரி மாவட்டம் தனமண்டி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் இன்று சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. கையெறி குண்டுகள், துப்பாக்கிகள், ஏ.கே.-47 மேகசின்கள், தோட்டாக்கள், டெட்டனேட்டர்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
ரஜோரி போலீசார், 38 ராஷ்டிரிய ரைபிள்ஸ், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) மற்றும் ராணுவம் அடங்கிய கூட்டுக் குழுவினர் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.