செய்திகள்
சீனா நமது நிலத்தை ஆக்கிரமித்ததா என்பதை பிரதமர் விளக்க வேண்டும் -ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
பிரதமர் மோடியின் லே பயணம் ராணுவ வீரர்கள் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தை உருவாக்கும் என்றும் அவர்களை ஒருங்கிணைக்க உதவும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
சீனாவுடன் மோதல் ஏற்பட்ட லடாக் எல்லைப்பகுதிக்கு நேற்று திடீர் பயணமாக சென்ற பிரதமர் மோடி, ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, அவர் ‘கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம், ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது’ என்று பேசினார். மேலும், சீன ராணுவ வீரர்களுடனான மோதலில் காயம் அடைந்த நமது ராணுவ வீரர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் லே பயணம், ராணுவ வீரர்கள் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தை உருவாக்கும் என்றும், அவர்களை ஒருங்கிணைக்க உதவும் என்றும் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
‘பதற்றம் நீடித்து வந்த பகுதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்பே சென்று இருக்க வேண்டும். இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவியதை மோடி அரசு மறுக்கக்கூடாது. இந்திய எல்லையில் ஊடுருவிய சீன துருப்புகள் அனைவரையும், அவர்களது ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களுடன் அடியோடு விரட்டி அடிக்கவேண்டும். அதேவேளையில், சீனா நமது நிலத்தை ஆக்கிரமித்துள்ளதா? என்பது குறித்தும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்’ என்றும் சவுத்ரி கூறி உள்ளார்.