செய்திகள்
முக கவசம்

மாநிலங்களுக்கு 2 கோடி முக கவசங்கள்- மத்திய அரசு வினியோகம்

Published On 2020-07-04 03:18 GMT   |   Update On 2020-07-04 03:18 GMT
கொரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்த்து போராடுவதற்காக மாநிலங்களுக்கு 2 கோடி என்-95 முக கவசங்களை மத்திய அரசு வினியோகித்துள்ளது.
புதுடெல்லி:

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல் 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, பிரேசில், ரஷியாவுக்கு அடுத்து 4-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியாவில் இந்த வார தொடக்கம் முதல் கொரோனா வைரஸ் தொற்று, ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 6.25 லட்சத்தை கடந்துள்ளது. இதே போன்று உயிர்ப்பலி 18 ஆயிரத்து 200-ஐ தாண்டி இருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான போரில் மாநிலங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தீவிரமாக உள்ள நபர்கள் வென்டிலேட்டர்களின் கீழ் (செயற்கை சுவாச கருவிகள்) வைத்து சிகிச்சை அளிக்க ‘பி.எம்.கேர்ஸ்’ நிதியில் இருந்து 2 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி, உள்நாட்டில் 50 ஆயிரம் வென்டிலேட்டர்களை தயாரித்து மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

அந்த வகையில் இதுவரை 11 ஆயிரத்து 300 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டு மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய அரசு ஆஸ்பத்திரிகளுக்கும் வினியோகிக்கப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி ஏற்கனவே 6,154 வென்டிலேட்டர்களை வழங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. அந்த வகையில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு 1 லட்சத்து 2 ஆயிரம் சிலிண்டர்களை வழங்கி வருகிறது. அவற்றில் 72 ஆயிரத்து 293 சிலிண்டர்கள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை மேம்படுத்த தரப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடி வருகிற நோயாளிகளை டாக்டர்கள், நர்சுகள், சார்பு மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோர் முன்நின்று கவனித்து வருகிறார்கள். தங்கள் உயிரைக்கூட துச்சமாக கருதி பணி செய்கிற அவர்களுக்கு தொற்று பரவாமல் இருக்க பி.பி.இ. என்னும் சுய பாதுகாப்பு கவச உடைகளையும், கருவிகளையும், என்-95 முக கவசங்களையும் வழங்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

நாடு முழுவதும் 2 கோடியே 2 லட்சம் என்-95 முக கவசங்களும், 1 கோடியே 18 லட்சம் சுய பாதுகாப்பு கவச உடைகளும், கருவிகளும் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளன.


கொரோனா வைரஸ் வெறியாட்டம் போட்டு வருகிற டெல்லிக்கு 7 லட்சத்து 81 ஆயிரம் சுய பாதுகாப்பு கவச உடைகளும், கருவிகளும் 12 லட்சத்து 76 ஆயிரம் என்-95 முக கவசங்களும் வழங்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்துக்கு 11 லட்சத்து 78 ஆயிரம் சுய பாதுகாப்பு கவச உடைகளும், கருவிகளும், 20 லட்சத்து 64 ஆயிரம் என்-95 முக கவசங்களும் தரப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டுக்கு 5 லட்சத்து 39 ஆயிரம் சுய பாதுகாப்பு கவச உடைகளும், கருவிகளும், 9 லட்சத்து 81 ஆயிரம் என்-95 முக கவசங்களும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், நாடு முழுவதும் 6 கோடியே 12 லட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளும் வினியோகிக்கப்பட்டுள்ளன. இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Tags:    

Similar News