செய்திகள்
அசாம் வெள்ளத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு - பிரதமர் மோடி தலா ரூ.2 லட்சம் நிதியுதவி
அசாம் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது. வெள்ளத்தால் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.
கவுகாத்தி:
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அசாம், மேகாலயா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ள நிலையில், அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
அசாமில் பெய்து வரும் கனமழை குறித்து முதல் மந்திரி சர்பானந்த சோனோவாலிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது, மாநிலத்துக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் மத்திய அரசு வழங்கும் என தெரிவித்தார்.
இந்நிலையில், அசாம் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது. வெள்ளத்தால் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அசாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.