செய்திகள்
லடாக்கில் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி
லடாக்கின் லே பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு ராணுவ வீரர்களிடம் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.
புதுடெல்லி:
லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 15-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு, காயம் அடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியானது. இதையடுத்து, இந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
இதற்கிடையே, மோதல் நடந்த பகுதியில் இந்திய பிரதமர் மோடி இன்று திடீரென ஆய்வு செய்தார். லடாக்கில் உள்ள லே பகுதிக்கு பயணம் மேற்கொண்ட அவர், அங்கிருந்து விமானத்தில் பறந்தபடி, எல்லையில் உள்ள நிலைமை மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளை ஆய்வு செய்தார். அவருடன் முப்படை தளபதி பிபின் ராவத்தும் சென்றிருந்தார்.
அதன்பின், நிம்முவில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், இந்திய ராணுவ வீரர்களின் மன உறுதி மலையைப் போல பலமாக இருக்கிறது. நீங்கள் நாட்டின் எதிரிகளுக்கு உரிய பாடம் புகட்டி உள்ளீர்கள் என பாராட்டு தெரிவித்தார்.
இந்நிலையில், ராணுவ வீரர்களிடம் பேசிய பிரதமர் மோடி திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார். அப்போது , திருக்குறளில் உள்ள 77 வது அதிகாரம், படை மாட்சி என்ற அதிகாரத்தில் 766வது பாடலை கூறினார்.
மறமானம் மாண்ட வழிசெலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.
வீரம், மானம், இறுதிவரைதேவையானவை, தெளிவான முடிவு என்ற இந்நான்கு பண்புகளும் படைக்கு அவசியமாகும் என்பது இதன் பொருளாகும்.