செய்திகள்
காஷ்மீர் என்கவுண்டர்: 1 பயங்கரவாதி சுட்டுக்கொலை - ராணுவ வீரர் வீரமரணம்
காஷ்மீரில் நள்ளிரவு நடந்த என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த மோதல் சம்பவத்தில் ஒரு ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஸ்ரீநகரில் உள்ள மல்பஹ் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நள்ளிரவு பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்களது தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஆனால், மோதலின் போது பாதுகாப்பு படையை சேர்ந்த வீரருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டார். ஆனால் அந்த ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மோதல் நடைபெற்ற பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.