செய்திகள்
வரலாற்றில் முதல்முறையாகச் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்த இந்திய ரெயில்கள்
இந்திய வரலாற்றில் முதல்முறையாகச் சரியான நேரத்தில் அனைத்து ரெயில்களும் வந்தடைந்தன என்று ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
அதிக மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில் பெரும்பாலும் ரெயில்கள் நிரம்பி வழிந்தபடிதான் செல்லும். ஆனால் கொரோனாவால் தற்போது வழக்கமான ரெயில்கள் இயக்கப்படவில்லை. சிறப்பு ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. புழம்பெயர் தொழிலாளர்களுக்காக விடப்பட்ட ரெயில் பல மணி நேரம் தாமதமாகவும், சேர வேண்டிய இடத்திற்குப் பதிலாக வேறு இடத்திற்கு சென்ற நிலையும் ஏற்பட்டது.
இந்நிலையில் வரலாற்றிலேயே முதல் முறையாக இன்றைய தினத்தில் இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களும் சரியான நேரத்திற்கு நிலையங்களைச் சென்றடைந்திருப்பாக இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது.
இன்று இயக்கப்பட்ட 201 ரெயில்களும் சரியான நேரத்தில் இயக்கப்பட்டு, சரியான நேரத்தில் குறிப்பிட்ட நிலையங்களைச் சென்றடைந்துள்ளன. இந்த ரெயில்கள் அனைத்தும் அத்தியாவசிய ஊழியர்கள் மற்றும் அவசர தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டவையாகும்.
இதற்கு முன்னதாக கடந்த ஜூன் 23-ம்தேதி 99.54 சதவீத ரெயில்கள் சரியான நேரத்தில் வந்திருக்கின்றன. அன்றைய தினம் ஒரே ஒரு ரெயில் மட்டும் தாமதமாக வந்திருக்கிறது. ஆனால் இன்று அனைத்து ரெயில்களும் சரியான நேரத்தைப் பின்பற்றியுள்ளன.