செய்திகள்
ராஜஸ்தான் விவசாயிகளை தொடர்ந்து மிரட்டும் வெட்டுக்கிளிகள்- ட்ரோன் மூலம் மருந்து தெளித்து அழிப்பு
ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து படையெடுக்கும் வெட்டுக்கிளிகள், விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.
ஜெய்சால்மர்:
வட இந்தியாவில் ராஜஸ்தான், மத்திய பிரதேதம், குஜராத், உத்தர பிரதேசம், அரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளன. மத்திய வேளாண் அமைச்சகம் மூலம் விவசாய நிலங்களில் மருந்து தெளிக்கப்பட்டு வெட்டுக்கிளிகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
எனினும், ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக படையெடுத்து வரும் வெட்டுக்கிளிகள், பயிர்களை தின்று தீர்ப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்தடுத்து வெட்டுக்கிளிகள் படையெடுப்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. நேற்று ஜெய்சால்மரில் வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்தன. இதனையடுத்து டிரோன்கள் மூலம் மருந்து தெளித்து வெட்டுக்கிளிகள் அழிக்கப்பட்டன.
#WATCH Rajasthan: Drones being used to spray chemicals as swarms of locusts arrive in Jaisalmer. (30.06.2020) pic.twitter.com/HZRilUO1M7
— ANI (@ANI) July 1, 2020
இதேபோல் நகாவூர் பகுதியிலும் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெட்டுக்கிளிகள் பரவின. இதனையடுத்து பொதுமக்கள் பாத்திரங்களை அடித்து சத்தம் எழுப்பி வெட்டுக்கிளிகளை விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த முயற்சியின் மூலம் ஓரளவு பயிர்களை காப்பாற்ற முடிந்தது. இரவு நேரங்களில் வெட்டுக்கிளிகள் ஒரே இடத்தில் கூட்டமாக இருக்கும் என்பதால், அவற்றை அழிக்கும் நடவடிக்கையில் வேளாண் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுபற்றி பேசிய கூடுதல் கலெக்டர், ‘இது வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்க காலம். எனவே பிரச்சினை இன்றும் அதிகரிக்கப் போகிறது. வெட்டுக் கிளிகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது’ என்றார்.