செய்திகள்
தேர்வு மையத்தில் இருக்கைகளில் கல்வித்துறை அதிகாரிகள் மாணவ-மாணவிகளின் வரிசை எண்களை எழுதியதை படத்தில் காணலாம்.

கர்நாடகத்தில் கொரோனா பீதிக்கு மத்தியில் இன்று தொடங்குகிறது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

Published On 2020-06-25 02:54 GMT   |   Update On 2020-06-25 02:54 GMT
கர்நாடகத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி கொரோனா பீதிக்கு மத்தியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று(வியாழக்கிழமை) தொடங்குகிறது. சுமார் 8½ லட்சம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வினை எழுதுகிறார்கள்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெறுவதாக இருந்தது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கொரோனா பரவல் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போதும் முன்பை விட கர்நாடகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. ஆயினும் மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 25-ந் தேதி (அதாவது இன்று) நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் இந்த மாதத்தின் தொடக்கத்தில் அறிவித்தார். இதற்கிடையே அண்டை மாநிலமான தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மாநில அரசுகள் ரத்து செய்துவிட்டன. மேலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கர்நாடகத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் திட்டமிட்டபடி கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்தப்படும் என்று மந்திரி சுரேஷ்குமார் உறுதிபட அறிவித்தார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. மாநிலத்தில் தற்போது கொரோனா பரவல் மேலும் வேகமெடுத்து உள்ளது. இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொரோனா பீதிக்கு இடையே கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 3,209 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 8 லட்சத்து 48 ஆயிரத்து 203 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இதில் 330 மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளனன. இதில் 57 மையங்கள் பதற்றம் நிறைந்தவை என்றும், 4 மையங்கள் அதிக பதற்றம் நிறைந்தவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இதில் மாணவர்கள் 4 லட்சத்து 48 ஆயிரத்து 560 பேரும், மாணவிகள் 3 லட்சத்து 99 ஆயிரத்து 643 பேரும் அடங்குவர். மாணவர்களின் உடல்நிலையை பரிசோதிக்க 7,115 தெர்மல் ஸ்கேனர் கருவிகளை தேர்வு மையங்களுக்கு அரசு கொடுத்துள்ளது. தேர்வு மையங்களில் மாணவர்களின் உடல்நிலையை பரிசோதனை செய்ய 5,755 சுகாதார குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வை பாதுகாப்பான முறையில் நடத்த அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு 9 லட்சம் துண்டு பிரசுரங்கள் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது.

அதே போல் தேர்வு மையங்களில் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றிய விவரங்கள் அடங்கிய 6,500 துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் 3,209 உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

தேர்வு பணிகளை கவனிக்க 81 ஆயிரத்து 265 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 5,758 ஆசிரியர்கள் தயாராக வைக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே இன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்க உள்ள நிலையில் மாநில பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று ஒரு தேர்வு மையத்திற்கு சென்று தேர்வுக்கான ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதற்கிடையே கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று (25-ந் தேதி) ஆங்கிலம், நாளை (26-ந் தேதி) பொருளியல், 27-ந் தேதி கணிதம், 29-ந் தேதி அறிவியல், ஜூலை 1-ந் தேதி சமூக அறிவியல், 2-ந் தேதி கன்னடம், தெலுங்கு, இந்தி, தமிழ் உள்ளிட்ட முதல் மொழி, 3-ந் தேதி 3-வது மொழி தேர்வுகள் நடைபெற உள்ளன. தேர்வு தினமும் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறும்.
Tags:    

Similar News