செய்திகள்
கொரோனா வைரஸ்

1 லட்சம் மக்கள் தொகைக்கு ஒருவர் வீதம் கொரோனாவுக்கு பலி- மத்திய அரசு தகவல்

Published On 2020-06-24 02:52 GMT   |   Update On 2020-06-24 02:52 GMT
இந்தியாவில், 1 லட்சம் மக்கள் தொகைக்கு ஒருவர் வீதம் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. இது, உலக அளவில் மிகக்குறைவு என்றும் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உலக சுகாதார அமைப்பு, கடந்த 22-ந் தேதி ஒரு புள்ளிவிவர அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகஅளவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் இந்தியாவில்தான் மிகக்குறைவு என்று தெரிய வந்துள்ளது.

அந்த அறிக்கையில், உலக அளவில் கொரோனா உயிரிழப்பின் சராசரி அளவு, ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 6.04 என்ற விகிதத்தில் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு ஒருவர் வீதம்தான் இறந்துள்ளனர்.

மற்ற நாடுகளை பொறுத்தவரை, இங்கிலாந்தில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 63.13 பேரும், ஸ்பெயின் நாட்டில் 60.60 பேரும், இத்தாலியில் 57.19 பேரும், அமெரிக்காவில் 36.30 பேரும், ஜெர்மனியில் 27.32 பேரும், பிரேசில் நாட்டில் 23.68 பேரும், ரஷியாவில் 5.62 பேரும் உயிரிழந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு, உரிய நேரத்தில் தொற்றுகளை கண்டறிதல், அவர்களின் தொடர்புகளை கண்டறிதல், திறமையான சிகிச்சை முறை ஆகியவையே காரணம் ஆகும்.

குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது, இது 56.38 சதவீதமாக உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News